மாற்றுத்திறனாளிகளை கேலி செய்து வீடியோ; கிரிக்கெட் வீரர்களின் மோசமான செயல்

0
33

மாற்றுத்திறனாளிகளை கேலி செய்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவேற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி பொலிஸ் நிலைய அதிகாரியிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தப் முறைப்பாட்டில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.

முறைப்பாட்டின்படி மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.

“இது தொடர்பாக அமர் காலனி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த முறைப்பாடு மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அந்த காணொளி யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.