மருத்துவர் அருச்சுனா விவகாரம்; சிறையில் அடைப்பேன் என அச்சுறுத்திய சாவகச்சேரி பொலிஸ்!

0
45

மருத்துவர்  இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைப்பேன் என்று சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் (17) சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கமைய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்தார்.

இதன்போது செய்தி அறிக்கையிட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பட்டாளர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்று கூடினர்.

இந்நிலையில் அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களைப் பொலிஸ் நிலையத்துக்குள் வருமாறு அழைத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குறித்த செய்தி அறிக்கையிடலில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்ததுடன் வைத்தியர் அர்ச்சுனாவிடம் எந்தவொரு நேர்காணலும் எடுக்கக்கூடாது என்றும் கூறினார்.

அத்துடன் உத்தரவை மீறி நீங்கள் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டால் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடினீர்கள் என்று குற்றஞ்சாட்டி உங்களைச் சிறையில் அடைப்பேன் என்றும் ஊடகவியலாளர்களை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர். இந்த நிலையில் ஊடகவியலாளர்களைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்தியமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் ஊடக அமைப்புக்களிடமும் ஊடகவியலாளர்கள் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.