பயிற்சிக்கு முன் சிகிச்சை அளித்த மருத்துவ மாணவி; குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலை!

0
43

வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவ மனை ஒன்றில் 6 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் மருத்துவ மாணவி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று (14) உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 3ஆம் திகதி கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் தம்பதிகள்  தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் சிகிச்சையின் பின்னர் குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து சிகிற்சை அளித்த வைத்தியருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டு மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்போதே மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் சிகிற்சை அளித்த மருத்துவரின் பெயருக்கு  பதிலாக மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வினவிய போத, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான  மருத்துவ மாணவி  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் செய்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான மருத்துவ மாணவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.