கென்யா நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: 50க்கும் மேற்பட்டோர் காயம்

0
65

கென்யாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வரியை உயர்த்தப் போவதாக அந் நாட்டின் அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வரி உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட இருந்தது. இந்த தீர்மானத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கென்யா நாடாளுமன்றத்தில் வரி உயர்வு மசோதா மீதான வீவாதம் நடந்து கொண்டிருந்தது.

அச்சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

அத்துடன் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்து கொளுத்தினர். கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்ததையடுத்து போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

முடியாத பட்சத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 27 பேர் பலியானதாக மனித உரிமை குழு தெரிவித்துள்ளது. மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.