சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹனுமான் ஜெயந்தி யாத்திரையின் போது தனது இரு கைகளிலும் இன்சுலினுடன் ஹனுமான் வேடமிட்ட ஒருவர் கலந்துகொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த யாத்திரையில் டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சவுரப் பரத்வாஜ் கலந்து கொண்டிருந்தார். இதன்போது சிறை நிர்வாகத்தின் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு “அச்சுறுத்தல்” இருந்தபோதிலும் அவருக்கு இன்சுலின் வழங்க திகார் அல்லது மத்திய அரசு தயாராக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராமரின் தம்பியான லக்ஷ்மணனின் உயிரை ‘சஞ்சீவனி’ மூலம் காப்பாற்றியது போல் “அனைவரின் கஷ்டங்களையும் ஹனுமான் நீக்குவார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் திங்கள்கிழமை இரவு குறைந்த அளவிலான இன்சுலின் வழங்கப்பட்டது.
இதன்போது அவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்தது. சக்கரை நோயாளியான கெஜ்ரிவால், திகார் சிறை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இன்சுலின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.