மீண்டும் ஒரு வித்தியாவா?: யாழில் குடும்ப பெண் மீது கூட்டு வன்புணர்வு!

0
31

யாழ்ப்பாணத்தில் குடும்ப பெண் ஒருவர் பல தடவைகள் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதைப் பொருள் கொடுத்து பல தடவைகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

“யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரின் தாய் தந்தையர் உயிரிழந்ததை அடுத்து குறித்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரன் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஜனவரி மாதம் வீட்டில் உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி அதனை பலாத்காரமாக நுகர வைத்து அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வந்த நாட்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 15 வயதான பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அங்கு குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.