ஜூலை ஆரம்பமாகிறது ஒலிம்பிக் கோலாகல பெருவிழா: ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது ஒலிம்பிக் தீபம்

0
35

ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி பிரான்ஸ் தலைநகரம் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய பரிஸ் 2024 ஒலிம்பிக் தீபம் பண்டைய ஒலிம்பியாவில் செவ்வாய்க்கிழமை பாரம்பரிய விழாவில் ஏற்றப்பட்டது.

கிரேக்க நடிகை மேரி மினா ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். கிரீஸ் ஜனாதிபதி கேடரினா சகெல்லரோபௌலோ, பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஓடியா – காஸ்டெரா, பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ஆகியோர் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் விழாவில் கலந்து கொண்டனர். அமெரிக்க மெஸ்ஸோ சோப்ரானோ ஜாய்ஸ் டிடோனாடோ ஒலிம்பிக் கீதத்தைப் பாடினார்.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 100 நாட்களே உள்ளன. பரிஸில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி தொடங்கும் போட்டிகள் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை ரசிகர்களுக்கு விருந்தையும், வீரர்களுக்கு விருதையும் வழங்கவுள்ளன.

இதன் தொடக்க விழா நிகழ்வுகள் ஈபிள் டவருக்கு அருகேயுள்ள சாம்ப் – டி – மார்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

133 நாடுகளைச் சேர்ந்த 10, 500 வீர வீராங்கனைகள் 320 போட்டிகள் அடங்கிய 32 பிரிவு விளையாட்டுகள் என்று 15 நாட்கள் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் களைகட்டவுள்ளன.

வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்நாட்டின் சிறப்பம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மஸ்கட் எனப்படும் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

அந்தவகையில் இம்முறை ஒலிம்பிக் போட்டியிலும் அப்படியொரு மஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ரிஜியன் தொப்பி தான் பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மஸ்கட் என்பது குறிப்பிடத்தக்கது.