இரான் சிறைபிடித்த கப்பலில் உள்ள 4 தமிழர்கள் யார்? தற்போதைய நிலை என்ன?

0
44

இரான் சிறைபிடித்த கப்பலில் இருக்கும் இந்தியர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் கோருகின்றனர். இந்திய வெளியுறவுத் துறையின் கோரிக்கைக்கு இணங்க கப்பலில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஒரு மணி நேரம் செல்போன் அனுமதி திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டது.

இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை நடுக்கடலில் இரான் கடந்த 13ம் தேதி சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் சிக்கியுள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள், அதில் நான்கு பேர் தமிழர்கள். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலிய தொழிலதிபருடன் தொடர்புடைய இந்த கப்பலை இரான் சிறைப்பிடித்துள்ளது. போர் சூழலில் சிறைபிடிக்கபட்டிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கப்பலில் உள்ள தமிழர்களின் நிலை என்ன?

கப்பலில் சிக்கியுள்ள தமிழர் ஒருவரின் சகோதரர் மைக்கேல், பிபிசி தமிழிடம் பேசும் போது, “நேற்று ஒரு மணி நேரம் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. எனது சகோதரனுடன் பேசினோம். துன்புறுத்தல்கள் எதுவும் இல்லை. கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கமாக என்ன நடவடிக்கைகள் இருக்குமோ அவை நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருட்கள் போதிய அளவு உள்ளன. கப்பல் முழுவதும் இரானின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. யாரிடமும் செல்போன், லேப்டாப் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.

இராக்கிலிருந்து இந்தியாவில் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல், அபுதாபியை தாண்டிய பிறகு இரானால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரானுக்கு நல்ல உறவுகள் இருப்பதால் தான் அவர்களுடன் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. போர் அல்லாத சூழலில் இப்படி நடந்திருப்பதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை இல்லை. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படி இல்லை. 17 பேரையும் விடுவிப்பது குறித்து அரசு உறுதியளிக்க வேண்டும், எப்படி திருப்பி கூட்டி வரப் போகிறார்கள் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் ” என்று கூறுகிறார்.