இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பலை இரான் சிறைபிடித்தது ஏன்? என்ன நடந்தது?

0
63

அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பலை சனிக்கிழமை இரான் கைப்பற்றியது. இந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட மொத்தம் 25 பேர் இருந்ததாக சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களை விரைந்து மீட்பது குறித்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இது குறித்து இரானிய அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்கரையில் இருந்து 50 மைல் தொலைவில் இருந்த எம்.எஸ்.சி ஏரிஸ் என்ற கப்பலை இரானிய சிறப்புப் படையினர் சிறைப்பிடித்திருப்பதை சம்மந்தப்பட்ட கப்பல் நிறுவனமும் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட வீடியோவில், ஹெலிகாப்டரில் இருந்தவாறு கப்பலின் மீது துருப்புகள் தாக்குவதைக் காட்டுகின்றன. “வெளியே வராதே” என கப்பலில் உள்ள ஒருவர் கத்துவதையும் கேட்க முடிந்தது.

போர்த்துகீசிய கொடி பொருத்தப்பட்டுள்ள அந்த கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் Eyal Ofer உடன் தொடர்புடையது.

எம்.எஸ்.சி-யின் படி, கப்பல் கைப்பற்றப்பட்ட நேரத்தில் அதில் 25 பணியாளர்கள் இருந்துள்ளனர். இந்தக் கப்பலை எம்.எஸ்.சி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இது ஓஃபரின் ‘சோடியாக் மெரிடைம்’ உடன் இணைந்த Gortal Shipping நிறுவனத்திடம் இருந்து கப்பலை குத்தகைக்கு எடுத்துள்ளது.

கடைசியாக உள்ள கண்காணிப்புத் தரவுகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் எம்.எஸ்.சி. ஏரிஸ் கப்பல், 18 மணிநேரத்திற்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி சென்றதைக் காட்டுகிறது. அதன்பின் அதன் கண்காணிப்புத் தரவு முடங்கியதாகத் தெரிகிறது.

பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை நிறுவனமான UKMTO வெளியிட்ட அறிக்கையில், இரானால் கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் இருந்ததை உறுதிப்படுத்தியது. ஆனால், அதில் இரானிய தலையீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா கடற்கரையில் “பிராந்திய அதிகாரிகளால்” கப்பல் கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி ஊடகமான இர்னா தெரிவித்துள்ளது. அந்த கப்பல், “இஸ்ரேலுடன் தொடர்புடையது” என்றும் அது தெரிவித்துள்ளது.

கப்பலை இரானிய கடற்பரப்புக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலோடு சேர்த்து கடத்தப்பட்ட பணியாளர்கள் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியாவைச் சேர்ந்தவர்கள் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் வாட்சன் தெரிவித்தார். அவர்களில் 17 பேர் இந்தியர்கள் ஆவர். அந்தக் கப்பல் இந்தியாவில் மும்பை அருகேயுள்ள நவ சேவா என்ற துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

“கப்பலையும் அதிலுள்ள சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க இரானுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்”

“ஆத்திரமூட்டும் நடவடிக்கை இல்லாமல் ஒரு கப்பலைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட கடற்கொள்ளை” இது என வாட்சன் தெரிவித்துள்ளார்.

“இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். மேலும் இரானை இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வைக்க எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம்” என்றும் Adrienne Watson கூறியுள்ளார்.

டெஹ்ரான் அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இரானிய புரட்சிகர காவலர் படையை உடனடியாக பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, இரானுக்கு தடை விதிக்க வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அந்த சரக்குக் கப்பல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினருக்குச் சொந்தமானது என்றார்.

2019ஆம் ஆண்டிலிருந்து அப்பிரதேசத்தில் பல கப்பல்களை இரானிய படைகள் கைப்பற்றியுள்ளன.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் மூத்தத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை இரான் குற்றம்சாட்டியதோடு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

சனிக்கிழமை நள்ளிரவு முதல் இஸ்ரேல் மீது இரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குலை தொடுத்துள்ளது. இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதலுக்கு சில மணிநேரங்கள் முன்னதாக, கப்பல் கடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது.