பொது வேட்பாளரின் அவசியம் தமிழ் மக்களுக்கு உள்ளது

0
44

தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான கூட்டமொன்று நேற்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

இக் கூட்டத்தின் முடிவில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன் போது அவர் தெரிவித்ததாவது..

பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாட இன்று நாங்கள் ஒரு கூட்டத்தை கூட்டினோம். அதிலே சிவில் சமூகத்தினர் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தினர் பங்கு பற்றினார்கள். ஆனால் பலவித காரணங்களால் அரசியல் தலைவர்களால் வர முடியாமல் போய்விட்டது. 

ஆனால் சிறிதரன் அவர்கள் இதற்கு வருவதற்கு விருப்பம் இருப்பதாகவும் எனினும் வவுனியாவில் ஒரு கூட்டம் மற்றும் கிளிநொச்சியில் ஒரு கூட்டம் இருப்பதாக சொல்லியிருந்தார். செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடு சென்றிருக்கின்றார். சுரேஸ் பிரேமச்சந்திரன் வருவதாக கூறினார். ஆனாலும் அவராலும் வர முடியாமல் போனது.

 இவ்வாறான சில பிரச்சனைகள் இருந்ததால் அரசியல்வாதிகள் அதிகம் வரவில்லை. நான் மட்டும் தான் ஒரு அரசியல்வாதியாக இருந்தேன். ஆனால் சிவில் சமூகத்தினர், ஊடகத்தினர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் இங்கே வந்திருந்தார்கள். 

வந்திருந்தவர்களிடத்தே பொது வேட்பாளர் சம்பந்தமான கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்தோம். அதாவது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் வந்திருந்த எல்லோருமே பொது வேட்பாளரை நிறுத்துவதன் அவசியம் தற்போது தமிழ் மக்களுக்கு இருக்கிறதென்பதை கூறி அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

இனி அடுத்த கூட்டத்திலே நாங்கள் கூடி இதிலே அரசியல் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு அதிகளவிலான சிவில் சமூகத்தினரையும் இணைத்து கோண்டு அதாவது தமிழ் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்க கூடியவர்களையும் உள்வாங்கி அவர்களினூடாக இது சாத்தியமான விடயமா இதை செய்வதற்கு எல்லோரும் ஆதரவு தருவார்களா என்ற பல விடயங்களையும் பேசியிருக்கின்றோம். 

இந்த முயற்சியின் ஆரம்ப கட்டமாக ஒரு சில விடயங்களை நாங்கள் பேசியிருக்கின்றோம். குறிப்பாக நாங்கள் யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்கக்கூறி அவரிற்கு வாக்களிக்கும் எண்ணத்தில் மக்கள் இருக்கின்றார்களா என்றொரு கேள்வி பல்கலைக்கழக மாணவர்களிற்கு எழுந்தது. 

அதற்கு நாங்கள அப்படி யாரையும் தெரிவு செய்யவில்லை. முதலில் பொதுக் குழுவை கூட்டி பொதுக் குழுவில் இருந்து ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுப்போம் என்று கூறிய போது அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அமைந்திருந்தது. 

ஆக இவ்வாறான சில சில கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நாங்கள் பதில்கள் வழங்கிக் கொண்டிருந்தோம். இது சம்பந்தமாக அவர்கள் எல்லோருக்கும் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. 

இது தான் இன்று நடந்தது. அதாவது பூர்வாங்க ஆராய்வு தான். அந்த ஆராய்வின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திடமான ஒரு கருத்து எல்லோரிடமும் காணப்பட்டது. இனி அது எந்தளவிற்கு வலுவுறும் என்பது அடுத்த கூட்டத்தில் தான் தெரிய வரும். 

ஆனால் எங்களுடைய பொது வேட்பாளராக ஒருவர் நிறுத்துவதன் காரணத்தினால் என்னென்ன நன்மைகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆராய்ந்து அறிந்தோம். 

அதாவது பொது வேட்பாளர் வந்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வருவார். தமிழ் மக்களின் ஐக்கியத்தை நிலைநிறுத்துவார். சிங்கள மக்களுடன் பேசி தமிழ் மக்களுக்கு எதிராக இருக்ககூடிய மயக்கங்களை தீர்க்க கூடியதாக இருக்கும். வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எங்களுடைய பிரச்சனைகளை எடுத்துக் கூறக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறு பலவிதமான விசயங்களை ஒரு பொது வேட்பாளர் ஊடாக நாங்கள் செய்யக் கூடியதாக இருக்கும். அதற்குத்தக்க ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று ஒரு கூட்டத்தை நடாத்தி உள்ளோம். இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு கூட்டத்தையும் வெகுவிரைவிலே நடாத்த இருக்கிறோம்.