குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை; தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்த மன்னார் குடும்பத்தினர்

0
29

மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் சென்று இன்று(30) காலை தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இலங்கையிலிருந்து படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி 01ம் மணல் திட்டில் இன்று(30) காலை வந்து இறங்கினார்கள்.

மணல் திட்டில் நின்று கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் நால்வரையும், மண்டபம் இந்திய கடலோர காவல்படை ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை அழைத்து வந்து இராமேஸ்வரம் மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நால்வரையும் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் இலங்கை தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தினசரி ஒரு குடும்பத்தில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட முடிவதாகவும், குழந்தைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ முடியாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.