அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த இலங்கையின் 13 சமையல் கலைஞர்கள்..!

0
75

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன், ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு விழாவிற்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று (07) அவர்கள் 13 பேரும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளனர்.

இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை நவீன முறைகளில் தயாரித்து பரிமாறியுள்ளனர்.

இவர்களின் உணவுகளை உட்கொண்ட வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்கள், கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த 13 பெரும் அம்பானி வீட்டு விசேஷத்தில் சமைப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடந்த மார்ச் 3 ஆம் திகதியன்று திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு மதிய உணவு தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அவர்கள் தயாரித்த உணவிற்கு விருந்தினர்களிடம் இருந்து கிடைத்த பதில் மற்றும் பாராட்டுக்களின் அடிப்படையில், அவர்களுக்கு மார்ச் 3 மற்றும் 4 ஆம் திகதிகளிள் இரவு உணவை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் “ஜாம்” நகரில் உள்ள அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவிலேயே இந்தத் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மிகவும் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ள நிலையில் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இன் திருமண நிகழ்வு எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.