யாழ்ப்பாணம் – சுழிபுரம் சவுக்கடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து ஆதரவளிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைக்கப்பட்டமை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடற்படையினரால் புத்தர் சிலை குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு கோரி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.