34 வயது பெண்ணை கொடூரமாக தாக்கிய அரசியல்வாதியின் மகன்..; வைத்தியசாலையில் பெண்

0
78

கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரின் மகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், ஆளுநரின் மகனைக் கைது செய்வதற்காக யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேகநபரின் சொகுசு ஜீப் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பயணத்தடை

குறித்த தாக்குதலுக்கு உள்ளான அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்ட 34 வயதுடைய பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து சந்தேகநபருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் கதிர்காமம் பகுதிக்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விடுதியை சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம்

இதனைத்தொடர்ந்து சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை பொலிஸ் காவலில் எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில், சந்தேகநபருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.