முச்சக்கர வண்டியிலிருந்து ஒரு மாத குழந்தை கீழே விழுந்தது தெரியாமல் சுற்றுலா பயணம் சென்ற குடும்பம்..!

0
89

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

தவறி விழுந்த குழந்தை

தாயும் தந்தையும் 6 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும் ஒரு மாத குழந்தையுடன் ஒரு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.

இதனிடையே தாயின் மடியில் இருந்த ஒரு மாத குழந்தை முச்சக்கரவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தது. எவ்வாறாயினும், வீதியில் பயணித்த வேன் ஒன்றின் சாரதி, குறித்த குழந்தையைப் பார்த்து, கித்துல்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சிறிது தூரம் சென்றபோது குழந்தை மாடியில் இல்லை என்பது தாய்க்கு தெரிய வந்தது.

அதற்கமைய, வீதியின் இருபுறமும் குழந்தையை தேடிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​மற்றொரு காரில் வந்த ஒருவர், குழந்தை ஒன்று வீதியில் விழுந்து கிடப்பதாகக் கூறியதையடுத்து, வேன் சாரதி ஒருவர் குழந்தையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள்

பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்ற போதும், உடலில் கீறல்கள் காணப்பட்டதால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழந்தையை கித்துல்கல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் குழந்தையை கரவனெல்ல மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் வைத்தியசாலை நிர்வாகம் குழந்தையை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தது.