யாழ்ப்பாண உணவகமொன்றில் கொத்து ரொட்டியில் தரமற்ற இறைச்சி – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

0
63

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சிக் கொத்து ரொட்டி வழங்கப்பட்டமையை அடுத்து குறித்த உணவகம் முத்திரையிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (15) மாலை குறித்த உணவகத்திற்குச் சென்ற ஒருவர் இறைச்சிக் கொத்து ரொட்டியினை வாங்கி உட்கொண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக உரோமங்களைக் கொண்ட இறைச்சித் துண்டொன்று தென்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இருப்பினும் குறித்த நபர் உணவகத்தில் கொத்து ரொட்டியினைப் பெற்றுக் கொண்டமைக்கான பற்றுச்சீட்டு மற்றும் இறைச்சித் துண்டு என்பவற்றைப் புகைப்படம் எடுத்து தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்பந்தப்பட்ட உணவகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத வகையில் இருந்த இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் தூய்மையற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை, இறைச்சி கொள்வனவு செய்யப்பட்டமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து குறித்த உணவகத்திற்கு எதிராக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றைய தினம் (17) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றத்தினால் 65,000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் குறித்த உணவகத்துக்கு முத்திரையிடப்பட்டுள்ளது.