ஐ.நா மனித உரிமை பேரைவயின் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் இலங்கை: பேரவையின் கொள்கைகளுக்கு எதிரானது என்கிறார் அலி சப்ரி

0
97

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை என்பதுடன், எதிர்மறையானவை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில், நேற்றைய கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

“இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு, இந்த தீர்மானங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் அரசாங்கம் நிராகரிக்கின்றது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாது.

குறிப்பாக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்கள். மனித உரிமைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளிற்கு எதிரானது.

இலங்கை தற்போது கடுமையான தடைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் மக்களிற்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.