விருது வென்ற ஷாருக்கான், நயன்தாரா ஜோடி!

0
96

பாலிவுட்டுக்கு சென்று முதல் படத்திலேயே தனது தரமான நடிப்பை வெளிப்படுத்திய நயன்தாரா நேற்று நடைபெற்ற தாதாசாகேப் பால்கே விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். விருதுகளுடன் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆடியது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடியாக சண்டைப் போட்டு நயன்தாரா பில்லா படத்துக்குப் பிறகு மிரட்டியிருந்தார்.

நயன்தாரா மற்றும் ஷாருக்கானை பிலிம்ஃபேர் விருதுகளில் கண்டுக்கொள்ளவில்லை. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் விருதுகள் வென்றனர். ஷாருக்கான், நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தாதாசாகேப் பால்கே விருதுகள் நிகழ்ச்சியில் ஷாருக்கான், அட்லீ, நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாலிவுட் திரையுலகின் பெருமைமிகு விருது விழா நிகழ்ச்சியான தாதாசாகேப் பால்கே விருது விழாவில் கடந்த ஆண்டு ஜவான் படத்தில் வேறலெவல் பர்ஃபார்மன்ஸ் செய்த நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஆலியா பட், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி விட்டு தனது முதல் பாலிவுட் படத்திலேயே விருதை வென்றிருக்கிறார் நயன்தாரா.

பாலிவுட் நடிகரும் ஜவான் படத்தின் ஹீரோவுமான ஷாருக்கான் சிறந்த நடிகருக்கான தாதாசாகேப் பால்கே விருது வென்றார். மேலும், நேற்று இரவு நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவுக்கு நடிகர் ஷாருக்கானே தனது கைகளால் அந்த விருதை வழங்கிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான இறைவன் மற்றும் அன்னபூரணி படங்கள் ஓடவில்லை. அதே சமயம் அன்னபூரணி படத்தால் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து கஷ்டத்தில் இருந்த நயன்தாராவுக்கு தற்போது பாலிவுட்டில் இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பது சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.