பைத்தியகார அரசியல்வாதிகளின் தேவைக்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாது – எஸ்.எம்.மரிக்கார்

0
111

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது எனவும் சில நேரம் கட்சி அதனை ஆதரிக்க தீர்மானித்தாலும் தனது ஆதரவு கிடைக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கலாம்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுன ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வகையில் தேர்தலை ஒத்திவைப்பதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு நானோ, ஐக்கிய மக்கள் சக்தியினரோ கைகளை உயர்த்த மாட்டோம்.

தோல்வியடைந்தது ஓய்வுபெற்ற சில அரசியல்வாதிகள் ஜோ பைடன் 78 வயதில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார் எனக்கூறி உற்சாகமடைந்துள்ளனர்.

நாடு வங்குரோத்து அடைந்து, நாட்டின் மீது இடி விழுந்திருந்த போது வாய் திறக்காத அரசசார்பற்ற குழுக்கள் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வருமாறு அழைக்கின்றன.

அந்த அமைப்புகள் வரி சுமையை குறைக்குமாறு ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. 9 லட்சம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஒரு வார்த்தையையேனும் பேசினார்களா?.

பிள்ளைகள் பாடசாலைக்கு பகுதி நேர அடிப்படையில் செல்லும் போது ஒரு வார்த்தை பேசினார்களா?. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலம் இருந்தது,அப்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வேலையை செய்திருக்கலாம்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நாங்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டோம். கட்சி தீர்மானித்தாலும் தற்போதைய சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க நான் ஆதரவு வழங்க மாட்டேன்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கலாம். மொட்டுக்கட்சியின் மோசடியாளர்களை விரட்டிய பின்னர் அதனை செய்யலாம்.

போராட்டத்திற்கு பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் நிலைப்பாடுகள் உருவாகியுள்ளன. புதிய தலைமுறையினர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை கொடுங்கள்.

அத்துடன் தாம் அனுபவித்து வரும் துன்பங்கள் சம்பந்தமாக மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். அவற்றை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வழி தேர்தல்.

நாட்டில் இரத்த களரி ஏற்படுவதை தடுப்பதற்காக மக்கள் தமது நிலைப்பாட்டை தேர்தலில் வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

அதனை விடுத்து பைத்தியகார அரசியல்வாதிகளுக்கு தேவையான வகையில் தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் எஸ்.எம்.மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.