நான்கு வயது குழந்தையை தாக்க நாயை ஏவிய இஸ்ரேலிய இராணுவம்..!

0
136

ஹமாஸ் அமைப்புடன் காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தையை தாக்குவதற்கு இராணுவ நாயை அனுப்பியதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள் குறிப்பிடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 04 ஆம் திகதி ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இராணுவ நாயை இஸ்ரேலிய இராணுவத்தினர் அவிழ்த்துள்ளனர்.

இதன்போது அந்தக் கட்டிடத்தில் இருந்த நான்கு வயதுடைய இப்ராஹிம் ஹஷாஷ் என்ற சிறுவனை இரத்தம் ஊற்றுமளவுக்கு இராணுவ நாய் தொடர்ந்து கடித்துள்ளது.

மூன்று நிமிடங்கள் தொடர்ந்த தாக்குதல்

மூன்று நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்ததாகவும் அதன் பின்னர் இஸ்ரேல் இராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இஸ்ரேல் இராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடந்து தாக்கிவருகிறது என சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.