குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா எனப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (01) இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
பிரதிவாதிகளாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
![ஹரக் கட்டா விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Famous Underworld Figure Harak Khata Police Arrest ஹரக் கட்டா விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Famous Underworld Figure Harak Khata Police Arrest](https://cdn.ibcstack.com/article/759a3c0d-c92b-4580-8b4e-f8444a7d1d60/24-65bc4791d831f.webp)
இடைக்கால உத்தரவு
இதன்படி, இந்த மனு தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மனுதாரர் ஹரக் கட்டாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமது கட்சிக்காரருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை எனவும், வழக்குத் தொடுப்பது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வழக்கை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும், இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் விசாரணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.