சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: சிவஞானம் ஸ்ரீதரன்

0
153

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிலுள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் நேற்றைய தினம் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசினேன்.

சாந்தனை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட் அவர்களோடு பேசப்பட்டுள்ளது.

அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும். அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்தில் அந்த விடயம் சாத்தியமாகும் என தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைதூதுவருடனும் நான் தொலைபேசியில் பேசினேன். பாதுகாப்பு அமைச்சினுடைய சில உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்திய தூதரகத்தால் ஆவணங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதி கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரி தெரிவித்தார் – என்றார்.