பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
150

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) மற்றும் அவரது மகன் உட்பட இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவு நேற்று (24.01.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம்

கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியோர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று மட்டு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.