இந்தியாவுக்கு எதிராக காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அங்குள்ள இந்து கோவில்கள், இந்திய தூதரகம் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு இந்தியா, அமெரிக்கா கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இந்த நிலையில் கலிபோர்னியாவில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் ஹேவார்டில் பகுதியில் விஜய் ஷெராவாசி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பலகை மீது பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும் காலிஸ்தான் வாழ்க என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததது.
இதை பார்த்து கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பில் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் எக்ஸ் வலை தளத்தில் கூறும்போது,
இச்சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு எதிராக விரைவான விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.