தெளிவான ஆதாரம் இருந்தால் கெஹலிய கைது செய்யப்படுவார்: அரசியல் கட்சி கத்துவதால் கைது செய்ய முடியாது – பாதுகாப்பு அமைச்சர்

0
203

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு தரம் குறைந்த மருந்து இறக்குமதி செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதற்கான தெளிவான சாட்சியம் கிடைத்தால் அவர் கட்டாயம் கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்படாமை தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“நான் சாதாரணமாக வேறு அமைச்சுகள் பற்றி பேசுவதில்லை. இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளில் ரம்புக்வெல்ல குற்றம் செய்தமைக்கான சாட்சியங்கள் இருந்தால், அவரை கைது செய்வார்கள்.

ஆனால் சாட்சியங்கள் இருக்க வேண்டும்.ஊடகங்கள், அரசியல் கட்சிகள் கத்துவததால் அவரை கைது செய்ய முடியாது. இந்த சம்பவம் தொடர்பான சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னர் செயலாளரை கைது செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் கூறப்பட்டது. எனினும் செயலாளரை கைது செய்யவில்லை.

சரியான சாட்சியங்கள் இருந்தால் மாத்திரமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவார்கள். சாட்சியங்கள் கிடைத்தால் முன்னாள் சுகாதார அமைச்சரையும் கைது செய்வார்கள்.அதில் எந்த மாற்றமும் இல்லை” என டிரான் அலஸ் கூறியுள்ளார்.