காரை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சிக்னல் கொடுத்த தனியார் பஸ் சாரதி!

0
121

பம்பலப்பிட்டியில் மகிழுந்தை செலுத்தி சென்ற பெண்ணுக்கு ஆபாசமான கை சமிக்ஞைகளை காட்டிய தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட பெண் தனது 10 வயது மகளுடன் விகாரமஹா தேவி பூங்காவிற்கு செல்வதற்காக ஹைலெவல் வீதியில் மகிழுந்தை செலுத்தி சென்ற போது ​​திம்பிரிகஸ்ஸயாய ஹெவ்லொக் வீதி டிக்மன் சந்தியின் வீதி விளக்குகளுக்கு அருகில் கார் நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் செல்வதற்கான சிக்னல் கிடைத்தவுடன், கார் பஸ்ஸை கடந்து செல்ல முற்பட்ட போது, பேருந்தின் ஜன்னல் வழியாக வலது கையை நீட்டி இவ்வாறு ஆபாசமான கை சமிக்ஞையை குறித்த சாரதி காட்டியுள்ளார்.

குறித்த பெண் கருவாத்தோட்டம் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரோஷினி நிலுஷிகா சிறிவர்தனவிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால் முறைப்பாட்டின் பிரதியை பெற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 50 வயதுடைய பெங்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.