50 வருடங்களில் மன்னார் தீவு இருக்காது – வினோ நோகராதலிங்கம்

0
156

ஐம்பது வருடங்களில் மன்னார் தீவு காணாமல் போகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கிறது.

மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசு மற்றும் அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனம் அதன் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இதனால் மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடிய அபாயம் உள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சுமார் 40 அடி ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பிற்காலத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்கும்.

இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதே எமது கேள்வி. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் மன்னார் தீவு அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது.

இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு இருக்காது. அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன. அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக் கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.

இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும்” என தெரிவித்தார்.