2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் அது இலங்கை மீண்டும் பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கையாக அமையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியமபலபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுங்க பரிசோதனை முனையத்திற்கு இராஜாங்க அமைச்சர் நேற்று விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தியதுடன் இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
‘‘பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் மீண்டும் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள் மீண்டும் இடம்பெற வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. வரவு – செலவுத் திட்ட தோல்வி அதற்கே வழிவகுக்கும்.
2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 5% ஐ தாண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 வருடங்களாக எந்தவொரு அரசாங்கத்தாலும் அதகை செய்ய முடியவில்லை. வரவு – செலவு பற்றாக்குறையை இந்த விகிதத்தில் பராமரிப்பதற்கான பொருளாதார சூழல் எமது நாட்டில் இல்லை.
இலங்கை இதுவரை சந்தித்திராத மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இதை எதிர்பார்ப்பது நியாயமற்றது.‘‘ என்றும் அவர் கூறியுள்ளார்.