பயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்….! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

0
163

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி நீல நிற பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, சிதைந்த நிலையில் காணப்பட்ட ஆண் நபரின் சடலம் மாரவில பிரதேசத்தில் போலி ஆவணம் தயாரிக்கும் வேலைவாய்ப்பு முகவருடையதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பல்வேறு நபர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாடுகள்

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய நபர்களுக்கு பயந்து வசிப்பிடத்தை விட்டுத் தப்பிச் சென்றவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பயண பொதியில் சடலம்

தடுகம் ஓயா கிதிகொட பாலத்தின் பயணப்பையில் கிடந்த சடலத்தில் தலை மற்றும் பல இடங்களில் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட கூந்தலுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இறந்த நபர், பழுப்பு நிற காற்சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.