தமிழ் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சிபிஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை, சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவம் தொடர்பான விசாரணை
இதில் 3 ஊடகவியலாளர்களும் அடங்கும் நிலையில் தமிழ் விவசாயிகளின், கால்நடை பணியாளர்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற போதே குறித்த ஊடகவியலாளர்கள் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிபிஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.