30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு வாடகை ஆயிரம் ரூபா – தேசிய கணக்காய்வு அலுவலகம்

0
206

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த 30 வருட காலமாக மாத வாடகை 1000 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த குடியிருப்புகளுக்கான மாத வாடகை தொகையில் இதுவரை திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திற்கமைய, மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாத வாடகையாக 1000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியை இழந்த பின்னர் உடனடியாக உத்தியோகபூர்வ குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டுமெனவும், அவ்வாறு வெளியேறாத நிலையில் நாளொன்றுக்கு 500 ரூபா அறவிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அபராதத் தொகையுடன் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் உட்பட 455,904 ரூபாவை செலுத்தியிருக்க வேண்டுமென தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.