பிரித்தானியாவில் முதன் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் கருவுறுதல் சிகிச்சையில் மிகப்பெரிய மைல்கல் என்றும் “மகத்தான வெற்றி” என்றும் புகழப்படும் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
ஏற்கனவே இரு குழந்தைகளை பெற்ற 40 வயதுடைய பெண் ஒருவர், தனது 34 வயது சகோதரிக்கு தனது கர்ப்பப்பையை தானம் செய்து உதவியதாக செய்தி வெளியிட்டுள்ளன.
கருப்பை தானம் பெற்ற பெண் பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளுக்கு நடைபெற்ற இந்த அபூர்வ உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு இருவரும் பரிபூர்ண நலம் பெற்று ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்பை பெற்ற இளைய சகோதரியும் அவரது கணவரும், கருப்பையில், கருக்கள் மாற்றப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.
கருப்பை தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சகோதரிகள் இருவருக்கும் அறுவைசிகிச்சைகள் ஆறு மாதங்களுக்கு முன்னதாக அதாவது 2023 பிப்ரவரியில் நடந்தது. இந்த அறுவைச் சிகிச்சையை 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்தினார்கள்.
லண்டன் சர்ச்சில் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சுமார் 17 மணி நேரம் நீடித்தது. இது போன்ற கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை பிரித்தானியாவில் முதல் முறையாக நடைபெற்றது.
ஆனால் ஸ்வீடன், அமெரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, சீனா, செக் குடியரசு, பிரேசில், ஜெர்மனி,செர்பியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 90க்கும் மேற்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
கருப்பை தானம் பெற்றுக் கொண்ட பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனைகளின் ஒரு பகுதியான ஆக்ஸ்போர்டு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணரான இசபெல் குய்ரோகா, நோயாளி கூறினார்.
“கருப்பை பொருத்திக் கொண்ட பெண் சந்திரனை தொட்ட ஆம்ஸ்ட்ராங் போல சந்தோஷமாக இருக்கிறார். ஒன்றல்ல இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறாள். அவளது கருப்பை சரியாக இயங்குகிறது. மேலும் அவளது முன்னேற்றத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.