பொலிஸ் உத்தியோகத்தரை மிரட்டிய பேருந்து சாரதி கைது: வெளியான காணொளி

0
185

மஹரகம நிலம்மஹர பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரட்டிய தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“சீருடைக்கு மதிப்பளித்து அனுப்பி விடு. இல்லையேல் நான் உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்” என வெலிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தரை குறித்த தனியார் பேருந்து சாரதி மிரட்டியுள்ளார்.

இராஜகிரிய தேவாலயத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது ஹெட்டியவத்தையிலிருந்து நுகேகொட நோக்கி பயணித்த தனியார் பேருந்து சோதனை நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றில் முன்னிலை

இதன்போது நிறுத்தபட்ட பேருந்தின் சாரதி “நீ தண்டப்பணம் பிடிப்பது பெரிய விடயம் அல்ல, ஆனால் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள். என் பெயர் தில்ஷன், யாராக இருந்தாலும் எனக்கு பயமில்லை” என அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான சாரதியின் நடவடிக்கைகளை பொலிஸ் உத்தியோகத்தர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

இதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.