மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணிகளில், போக்குவரத்து கட்டணம் வழங்கப்படாமையும் பிரதானமானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த 2017ஆம் ஆண்டின் பின்னர் வழங்கப்படவில்லை, இதனால் கவலையடைந்த மருத்துவர் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்ட விடயம்
மேலும் கூறுகையில், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதும் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது மருத்துவர்களுக்கு போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஒப்புக் கொண்டார். மருத்துவர்களுக்கு தனித்துவமான சம்பள முறைமையொன்று குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
சந்தை பெறுமதிகள் மற்றும் மருத்துவர்களின் செயல் திறன் என்பனவற்றின் அடிப்படையிலான சம்பள முறைமையாக இந்த யோசனைத் திட்டம் அமைந்துள்ளது.
மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
இந்த யோசனைத் திட்டம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏனைய தொழில்துறை சார்ந்தவர்களை விடவும் மருத்துவர்கள் கூடுதல் வரியை செலுத்த நேரிட்டுள்ளது. இது மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.