வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் நல்லூர் கந்தன் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் தலைமையில் கலந்தூரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
அதன் படி, ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.
ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும்.
வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.
அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.
ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது என்பதுடன், காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் நிறைவேற்ற வருகின்ற தூக்கு காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.
காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகருக்கு செல்லலாம் .
அதேசமயம் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரது பிரதிநிதி, யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.