2022 மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று புதன்கிழமை (19) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கவோ அல்லது அதற்கு எதிராக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவோ தவறியதன் மூலம் இலங்கை பொலிஸ் திணைக்களம் மக்களின் மனித உரிமைகளை மீறியுள்ளதாகக் கூறி ‘உயிர் உரிமை’ மனித உரிமைகள் மையத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு
அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரமவினால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோட்டகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து ராஜபக்ச அரசாங்கத்தை வீடு செல்லுமாறு கோரி கடந்த வருடம் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.