வரலாற்றில் முதல்தடவையாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று 24 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர்.
வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிநோயாளர் பிரிவில் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.
சீறி விழும் பெண் மருத்துவர்
குறித்த அமருத்துவர் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அப்பெண் வைத்தியர் அனைவருடனும் சீற்றத்துடன் நடந்து கொள்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
லேடிரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணத்தவறிவிட்டனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளா வைத்தியர் சமில் விஜயசிங்க சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக குறிப்பிட்ட வைத்தியருடன் ஏனைய வைத்தியர்கள் இணைந்து பணியாற்ற முடியாதநிலையேற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே மருத்துவமனையின் செயற்பாடுகள் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேடிரிஜ்வே வைத்தியசாலையின் வரலாற்றில் இடம்பெறவுள்ள முதலாவது தொழிற்சங்க போராட்டம் இதுவென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தொழிற்சங்க போராட்டம் சிறுவர்களை ஆபத்துக்குள்ளாக்க கூடிய ஒன்று எனவும் இது ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கை என வைத்தியசாலையின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.