கனடாவில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண் பேருந்து பயணி; சம்பவத்தின் பின்னணி

0
176

கனடாவில் கிப்லிங் ரயில் நிலையத்திற்கு வெளியே TTC பேருந்து ஒன்றில், அறிமுகம் இல்லாத நபரால் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளதாக குடும்பத்தினரும் சமூக மக்களும் நினைவு கூர்ந்துள்ளனர்.

உயிருடன் கொளுத்தப்பட்டவர்

திபெத்தை சேர்ந்த 28 வயது Nyima Dolma என்பவரே கடந்த ஆண்டு ஜூன் 17ம் திகதி தீப்பற்றக்கூடிய திராவகத்தை ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டவர். இதனையடுத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தார்.

ஆனால் காயங்கள் காரணமாக சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஜூலை 5ம் திகதி Nyima Dolma பரிதாபமாக மரணமடைந்துள்ளார். சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கிப்லிங் ரயில் நிலையத்திற்கு வெளியே நினைவஞ்சலி கூட்டம் ஒன்றை குடும்ப உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், அவர் மரணமடைந்த ஜூலை 5ம் திகதி வரையில் ஒவ்வொரு நாளும் பகல் இதுபோன்ற ஒரு சிறு அஞ்சலி கூட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதல் நிலை கொலை வழக்கு

இதனிடையே, திபெத்திய கனேடிய கலாச்சார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், இது கடினமான தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்றே ரொறன்ரோ பொலிசார் 33 வயது Tenzin Norbu என்பவரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை முயற்சி, ஆயுதத்தால் தாக்குதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஆனால் ஜூலை 5ம் திகதி Nyima Dolma மரணமடைந்ததை அடுத்து, முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

தாக்குதல் முன்னெடுத்த நபருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் வெறுப்புணர்வை தூண்டிய குற்றமாக கருதுவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.