பெலவத்தை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றுக்கு சிகிச்சைக்காக சென்ற ஒருவரை குழுவொன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து வேனில் தப்பிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றியதினம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில், கொகரதுவ, பெலவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலைவெறித்தாக்குதல்
விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபர் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக பெலவத்தையில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு வேனில் வந்த குழுவினர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை இதற்கு முன்னர் குறித்த நபர் வீட்டில் இல்லாத வேளையில், அங்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் உயிரிழந்தவரின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.