சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான இயக்கப்படும் 100வது விமான சேவை இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான ஊழியர்கள் அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – சென்னை விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும்
கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது டிசம்பர் 12 இல் இருந்து இன்றுவரை மொத்தம் 10,500 க்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியத் தூதரகத்தின் அறிக்கையில், இச்செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்டி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் – சென்னை விமானசேவை வாரத்தில் 4 தடவைகள் இடம்பெற்றுவரும் குறித்த விமான சேவையினை 7 தடவைகளாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

