இன்று தோண்டி எடுக்கப்படவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் சடலம்!

0
258

நீதிமன்ற உத்தரவின் படி, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் சடலம், புதைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.

இதன்போது குறித்த சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தது.

நீதிவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார்.

பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது.