நெடுந்தீவு படுகொலையில் கடற்படைக்கும் இராணுவத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயப்பட வேண்டும்; ஸ்ரீதரன்!

0
150

நெடுந்தீவில் 5 முதியவர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படைக்கும் இராணுவத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (26) புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சிறிதரன் எம்.பி. மேலும் பேசுகையில் “கடந்த 22.04.2023 இல் நெடுந்தீவு மண்ணில் இடம்பெற்ற ஒரு பாரிய மனிதப் படுகொலை தொடர்பில் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

நெடுந்தீவு படுகொலை தொடர்பில் கடற்படைக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு குறித்து ஆராயப்பட வேண்டும்; சிறிதரன்! | The Relationship Navy Army Neduntivu Massacre

5 வயோதிபர்களான திருமதி நாகசுந்தரி கார்த்திகேசு (83 வயது). இவரது கணவன் குமுதினிப் படகில் வைத்து கடற்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டவர். நாகநாதி பாலசிங்கம் (82 வயது), அவரின் மனைவியான கண்மணிப்பிள்ளை பாலசிங்கம் (76 வயது), நாகரத்தினம் வேலாயுதபிள்ளை (78 வயது), சுப்பிரமணியம் மகாதேவா (74 வயது) ஆகியோர் ஒரு நபரால் கடற்படையினரின் முகாமுக்கு அருகில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அதேநேரம் 100 வயதை எட்டிய மூதாட்டி பூரணம் கனகர் படுகாயத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கே கடற்படை முகாமுள்ளது. அதன் அருகோடு நெடுந்தீவு மண்ணில் யாரும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு பிரதேசத்தில் மிக மோசமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இது இந்த ஆண்டிலே நடந்த மிகப்பெரிய படுகொலை. இது நியாயமாக, நீதியாக விசாரிக்கப்பட வேண்டும். இதில் கடற்படைக்கும் இராணுவத்துக்கும் உள்ள தொடர்புகளும் ஆராயப்பட வேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதனைத் தான் இந்தச் சம்பவமும் உறுதிப்படுத்துகின்றது. இதேவேளை கிளிநொச்சி கௌதாரி முனையில் இருக்கின்ற மண்ணை அகழ்வதற்காக அஜித் தென்னக்கோன் என்பவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விசேடமான உத்தரவின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த மண்ணை அகழக்கூடாது என்ற கட்டளை இருக்கும் நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் பூநகரி பிரதேச செயலாளரை வைத்து அவருக்கூடாக அந்த மண்ணை அகழ்ந்து விற்பனை செய்வதற்கான முயற்சியில் வடக்கு ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.

இந்த விடயத்தையும் இந்தச் சபையில் பதிவு செய்கின்றேன். மிக முக்கியமாக ஜீவன் தியாகராஜாவின் நிதி நடவடிக்கைகள், அவர் செய்கின்ற ஊழல் நடவடிக்கைகள், அரச நடவடிக்கை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் இந்தச் சபை கவனம் செலுத்த வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.