கடத்தி கொண்டு சென்ற இளைஞனை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ள சம்பவம் மத்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மீகத்தன்ன-தியபத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
குறித்த இளைஞனின் வீட்டிற்கு பெண் ஒருவருடன் மூன்று பேர் நேற்று முன்தினம்(25.04.2023) இரவு சென்று அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட இளைஞனுடன் சந்தேகநபர்களான நால்வரும் முச்சக்கரவண்டியில் பயணித்த போது, மத்துகம நகரின் மையப்பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று(26.04.2023) காலை வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இதன்போது தான் கடத்தப்படுவதாக அந்த இளைஞன் கூச்சலிட்ட போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கடத்தல் சம்பவம் தெரியவந்துள்ளது.
பணத் தகராறு
மேலும் பணத் தகராறு காரணமாக இந்த கடத்தல் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக மேகத்தன்ன பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் தெஹிவளை, கிருலப்பனை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.