இரண்டாவது காதலன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, லவ் டார்ச்சர் செய்த முதல் காதலனை அடித்து ஆடைகளை அவிழ்த்து சாலையில் வீசிச் சென்ற கல்லூரி மாணவியை கேரள போலீஸார் கைது செய்தனர்.
2 நாள் முன்பாக கேரள மாநிலம் எர்ணாக்குளம் வர்க்கலை பகுதியில் சாலையில் நிர்வாணமாக கிடந்த வாலிபர் குறித்து போலீஸாருக்கு தகவல் போனது. படுகாயமடைந்த நிலையில் குற்றுயிராய் தவித்த அந்த இளைஞரை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனைக் காணவில்லை என அந்த இளைஞரின் தந்தை ஏற்கனவே புகார் அளித்திருந்ததால் எளிதில் அந்த இளைஞனின் பின்னணியை அறிந்தனர்.
பின்னர் இளைஞரைத் தாக்கி நிர்வாணமாக சாலையில் வீசிச் சென்ற கும்பல் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதில் இளைஞரின் செல்போனை மர்ம கும்பல் பறித்துச் சென்றிருந்ததில் செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் தேட ஆரம்பித்தனர். அப்படி எர்ணாகுளத்தின் இன்னொரு மூலையில் ஒளிந்திருந்த கும்பலை மோப்பமிட்டு முற்றுகையிட்டபோது அங்கே ஒரு இளம்பெண் மட்டுமே பதுங்கியிருந்தார்.
முன்னுக்குப்பின் முரணாக அந்தப் பெண் பேசியதில் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். அதில் அப்பெண் தெரிவித்த விவரங்கள் அதிர்ச்சி ரகம். அந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி ப்ரியா. எர்ணாகுளம் வர்க்கலையை சேர்ந்த லட்சுமி ப்ரியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் பூத்தது. நாளொரு மேனியாய் வளர்ந்த அந்தக் காதல் திடீரென கருக ஆரம்பித்தது. காரணம் லட்சுமி ப்ரியா கல்லூரியில் உடன் படித்த இன்னொரு பசையான இளைஞர் மீது மையல் கொண்டிருந்தார்.
இந்த விவரத்தை அறிந்து அதிர்ச்சியுற்ற முதல் காதலர் ஒருவாராக மனதை தேற்றிக்கொண்டு லட்சுமி ப்ரியாவிடம் பழைய காதலை மீண்டும் துளிர்க்க முயற்சித்தார். ’நாம் எப்படியெல்லாம் பழகினோம்; உன்னை என்னால் மறக்க முடியவில்லை’ என்றெல்லாம் உருகினார். எப்படியாவது லட்சுமி ப்ரியா மீண்டும் பழைய காதல் பாதைக்கு திரும்புவார் என் அந்த அப்பாவி இளைஞர் காத்திருந்தார். ஆனால் லட்சுமி ப்ரியாவோ இரண்டாம் காதலனிடம் சென்று இப்படி ஒருவன் என்னை லவ் டார்ச்சர் செய்கிறான் என்று புலம்பினார்.
பின்னர் லட்சுமி ப்ரியாவே ஐடியா ஒன்றையும் கொடுத்தார். அதன்படி, அந்த அப்பாவி இளைஞரை அழைத்து அடித்து அவமானப்படுத்தி அனுப்பி வைக்கலாம் என்று திட்டம் தீட்டினாள். அதன்படி இரண்டாவது காதலன் தன்னுடைய நண்பர்கள் 6 பேரை அழைத்து மது அருந்தி மூர்க்கத்தோடு காத்திருந்தனர். இப்போது முதல் காதலனை அழைத்த லட்சுமி ப்ரியா ’வா தனியாக சென்று பேசலாம்’ என்று ஆசையாக அழைப்பு விடுத்தார்.
ஆபத்தை அறியாத அப்பாவி இளைஞர் காதலி திருந்திவிட்டதாக நம்பி வலிய சென்று மாட்டினார். இரண்டு நாட்கள் அந்த இளைஞரை மர்ம இடத்தில் அடைத்து வைத்து தங்கள் போதைக்கு தோதாய் அடித்து திருப்தியானது லட்சுமி ப்ரியா கும்பல். பின்னர் ஆடைகள் மற்றும் செல்போனை உருவிக்கொண்டு நடுசாலையில் அந்த இளைஞரை வீசிச் சென்றனர்.
இத்தனையும் லட்சுமி ப்ரியாவிடம் விசாரித்து அறிந்த போலீஸார் அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல் என்ற நபரை கைது செய்து தலைமறைவான மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.