மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று (30) முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளிதுமளியைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் எம்.பி ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
352 ஏக்கர் வயல் காணியை அபகரிப்பு
இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 9 மணிக்கு வாகரை பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு, வாகனேரியில் சூரிய மின்சார திட்டத்துக்கு 352 ஏக்கர் வயல் காணியை அபகரிப்பு, மயிலத்தைமடு மேச்சல் தரை காணி அபகரிப்பு போன்ற பல்வேறு காணிகளை அபிவிருத்தி என்ற பேர்வையில் அபகரிப்பை நிறுத்த கோரி பொதுமக்கள் மாவட்ட செயலக்குக்கு முன்னால் ஒன்று திரண்டனர்.

இதனையடுத்து பொதுமக்களுடன் இரா.சாணக்கியன் எம்.பி மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை நோக்கி ஆர்பாட்ட பேரணியாக சென்ற நிலையில் அவர்களை காரியாலய பகுதிக்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
எனினும் அதனை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உட் செல்ல முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட நிலையில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கதவின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயலக பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள் நுழைந்தையடுத்து அங்கு பற்றநிலை ஏற்பட்ட நிலையில் மாவட்ட செயலகத்துக்குள் உள் நுழையும் கோட்டை கதவையும் மூடிய பொலிஸார் உட்செல்லவிடாது தடுத்ததால் கதவின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு கடமைக்கு மேலதிக பொலிஸார் வரவழைத்து பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு வருகை தந்திருந்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆர்ப்பாட்ட காரருடன் இணைந்து ஆர்பாட்த்தில் ஈடுபட்ட நிலையில் யாரும் காரியாலயத்துக்கு செல்லவோ காரியாலத்தில் இருந்து வெளியேற முடியாமல் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசாங்க அதிபருடன் பொலிஸார் கலந்துரையாடி கூட்டத்துக்கு செல்ல இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இரா.சாணக்கியன் எம்.பி மற்றும் அதிகரிகள் மற்றும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை உட்செல்ல அனுமதித்தனர்.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காணி தொடர்பாக அரசாங்க அதிபரிடம் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வினவிய போது காணி குறித்து எங்களுக்கு தொடர்பில்லை அது பிரதேச செயலகங்களிடம் கேட்குமாறு தெரிவித்ததையடுத்து அவர் பல வாதப் பிரதாபங்களின் மத்தியில் இங்கு மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்று தெரிவித்து கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் இடை நடுவில் வெளிநடப்பு செய்தனர்.