இந்தியா – டெல்லியில் இடம்பெற்று வரும் ஜீ 20 மாநாடுகளின் இறுதி அத்தியாயமாக இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை ஓரம்கட்டி விட்டு ஆளுகை செய்யத் தலைப்படும் குவாட் பொறிமுறை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நேற்றைய தினம் (03-03-2023) இடம்பெற்றது.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கெடுத்த இந்தக் கூட்டம் ஆரம்பிக்க முன்னர், 18 அம்சங்களுடன் கூடிய கூட்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
அந்தக் கூட்டு அறிக்கையில் குவாட்டின் மேலாதிக்க வாதத்தை விடாத வகையில், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு எனும் வகையில் அடிக்கடி நினைவூட்டல் குறிப்புகள் இருந்தன.
இன்றைய குவாட் சந்திப்பில் சீனாவின் செயற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்ட நிலையில், இந்த அமர்வு இடம்பெறும் நேரத்தில் இலங்கையில் குவாட் கண் வைக்கும் தோதான இடமாக திருகோணமலை இருப்பதாக பேச்சுக்கள் இடம்பெறும் நிலையில், அதே திருகோணமலையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று தென்பட்டார்.
எதிர்வரும் நாட்களில் இலங்கை தீவில் இடம்பெறக்கூடிய அரச எதிர்ப்பு போராட்டங்கள் ஊடாக, தன்னையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) போல அதிகாரத்திலிருந்து துரத்தி விடலாம் என்ற நினைப்பு மக்களுக்கு இருக்கக் கூடாது என்பதை மறைமுகமாக கூறும் ரணில் அதற்குரிய ஒரு வீராப்பு பதிலையும் இன்றைய தினம் திருகோணமலையில் உள்ள விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்துக் கூறி இருக்கின்றார்.
பொதுத் தேர்தல் ஒன்றின் ஊடாகவே அரசாங்கத்தை மாற்ற முடியும் எனவும் அதற்கு மாறாக வீதிப் போராட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் ஊடாக ஆட்சி மாற்றங்களுக்கு சாத்தியம் இல்லை எனவும் ரணில் கூறியிருக்கிறார்.
அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த பீடங்கள் தமது சங்க ஆணையை பிரகடனப்படுத்த வேண்டுமென தேசிய பிக்குகள் முன்னணி கோரியுள்ள நிலையில் ரணிலின் இந்தக் கருத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.