இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (Ashok Gehlot) வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கடைசி நிதிநிலை அறிக்கையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தாக்கல் செய்து உரையாற்றினார்.
8 முதல் 10 நிமிடங்கள் அவர் உரையாற்றிய நிலையில் அது பழைய பட்ஜெட் என்பதை முதல்வர் உணரவில்லை. இச்சம்பவம் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, முதல்வரின் அருகில் இருந்த அமைச்சர் அசோக் கெலாட்டிடம் இது தொடர்பில் எடுத்துக் கூறியதையடுத்து பட்ஜெட் உரையை அவர் நிறுத்தினார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
11.42 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா முதல்வரிடம் சரியான பட்ஜெட் ஆவணம் இல்லை என்பது மற்ற உறுப்பினர்களுக்கு எப்படித் தெரியும் என்று கேள்வி எழுப்பினார்.
“பட்ஜெட் கசிந்துவிட்டது. மாநில அரசு இப்போது ஆளுநரிடம் திரும்பிச் சென்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான புதிய திகதியை கோர வேண்டும்” என்று கூறினார்.
சபையில் குழப்பம் நீடித்ததால் சபாநாயகர் ஜோஷி மீண்டும் 12.12 மணிக்கு சபையை ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பில் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,
என் கையில் இருந்த பட்ஜெட் ஆவணங்களில் இருந்த தகவலுக்கும் உங்கள் கையில் இருந்த தகவலுக்கும் வித்தியாசம் இருந்தால் என்னிடம் கூறுங்கள்.
என்னிடம் இருந்த ஆவணத்தில் உள்ள ஒரு பக்கத்தில் தவறுதலாக ஒரு பக்கம் சேர்க்கப்பட்டிருந்ததால் அது எப்படி பட்ஜெட் கசிந்தது என கூற முடியும். சட்ட சபையில் நடந்த இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.