புற்று நோயால் உயிரிழந்த மாணவி! வீட்டு உரிமையாளர்களின் மனிதாபிமானமற்ற செயல்

0
329

மொனராகலை – கெத்தனகமுவ பிரதேசத்தில் தலையில் புற்று நோய் தாக்கி உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் சடலத்தை வைக்க இடமில்லாத காரணத்தினால், சடலத்தை விகாரையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நவகமுவ தேவமித்த மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வந்த நிபுனி நிசன்சலா என்ற மாணவி திடீரென நோய்வாய்ப்பட்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவி, தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் தெககமுவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது தந்தை முச்சக்கர வண்டி சாரதியாகவும், அவரது தாயார் தனியார் நிறுவனமொன்றில் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியைகள்

இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் வீட்டில் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்டமையினால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருந்த நிலையில் மனுங்கமுவ விகாரையின் களுபோவிடியான சிறிரதன தேரர் தலையிட்டு சடலத்தை விகாரை தர்ம மண்டபத்தில் வைக்க அனுமதி வழங்கியுள்ளதுடன், இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவியின் பூதவுடலுக்கான அனைத்து சமய சடங்குகளும் இன்று (28) விகாரையில் இடம்பெறும் எனவும் இறுதிக்கிரியைகள் கெககமுவ மயானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் களுபோவிடியான சிறிரதன தேரர் தெரிவித்துள்ளார்.