கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வளர்க்கும் காகம் அவர் இருக்கும் ஊர் மக்களும் செல்லப்பிராணியாக மாறிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
வினோத் என்ற இளைஞர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வினோத்தின் வீடு இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றிருக்கின்றன.
இதற்கு இடையூறாக வினோத்தின் வீட்டில் இருந்த தென்னை மரம் இருந்திருக்கிறது . இதனையடுத்து அந்த தென்னை மரத்தை வெட்ட முடிவெடுத்திருக்கிறார்.
அப்போது, தென்னை மரத்தை வெட்டிச் சாய்த்த பிறகு தான் அதில் காக்கை கூடு இருந்தது வினோத்திற்கு தெரியவந்திருக்கிறது.
பரிதாபமாக உயரிழந்த காக்கை குஞ்சுகள்
மரம் சாய்ந்து கீழே விழுந்ததில் அதில் இருந்த 3 காக்கை குஞ்சுகளில் இரண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
ஒரு காக்கை குஞ்சு மட்டும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் குற்ற உணர்ச்சி கொண்ட வினோத் அந்த காகத்தை காப்பாற்றியிருக்கிறார்.
குற்ற உணர்ச்சியில் இளைஞர் செய்த செயல்
அதன் உடல்நிலை சரியானவுடன் அதனை தொடர்ந்து வளர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார் வினோத்.
தற்போது வினோத் நடத்திவரும் பேக்கரியில் ஜாலியாக வலம்வரும் அந்த காகத்திற்கு கேசி எனவும் அவர் பெயர்சூட்டியிருக்கிறார் . தினமும் கேசிக்கு பிஸ்கட்கள், பழங்கள் மற்றும் இறைச்சிகளை கொடுத்து வருகிறார்.
மேலும், வினோத்தின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், அப்பகுதி மக்கள் பலரும் கேசியுடன் அன்புடன் பழகிவருகிறார்கள். ஒரு காகம் தற்போது ஊருக்கே செல்லப்பிராணியாக மாறியுள்ளது.