நெருப்பிலே போட்டாலும் மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் சந்திப்பொன்று, ஒன்றாக எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் களுத்துறையில் உள்ள ரோஹித்த அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே மேற்கண்டவாறு சூழுரைக்கப்பட்டது.
அத்துடன் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி ஆட்சி தொடரும். தேவையான நேரங்களில் உரிய அஸ்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் , மொட்டு கட்சி ஆட்சிமீது மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாவதற்கு விமல், கம்மன்பில, டலஸ் போன்ற உள்ளக சதிகாரர்களும் பிரதான பங்கை வகித்தனர் என விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டதுடன், இரசாயன உரப் பாவனைக்கு தடை விதிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவும் பின்னடைவுக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மே – 9 சம்பவத்துக்கு பிறகு பொதுவெளியில் மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள்
மே – 9 சம்பவத்துக்கு பிறகு மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் பொதுவெளியில் ஒரே மேடையில் சங்கமித்தது இதுவே முதன்முறையாகும். பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச, பவித்ராதேவி வன்னியாராச்சி, சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்ட மொட்டு கட்சி எம்.பிக்கள் நிகழ்வில் உரையாற்றினர்.
கூட்டத்தில் குறிப்பாக ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம் ஆகியோர், விமல், கம்மன்பில உள்ளிட்ட பங்காளிக்கட்சி தலைவர்களை கடுமையாக சாடியதுடன் சூழ்ச்சிக்காரர்கள் எனவும் முத்திரை குத்தியதுடன் டலஸ்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.
நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் போராட்டக்காரர்கள்மீது சொற்கணைகளைத் தொடுத்தனர். அதேபோல இரசாயன உரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்திருந்த முடிவை பவித்ரா தேவி சாடினார்.
சூளுரை
இனி யார் ஜனாதிபதியானாலும், தம்மையும், கட்சியையும் வழிநடத்த மஹிந்த ராஜபக்ச அவசியம் எனவும் பவித்ரா கேட்டுக்கொண்டார். மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறை ஜனாதிபதி ஆகியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், சுயவிமர்சனத்துடன், தவறுகளை திருத்திக்கொண்டு பீனிக்ஸ் பறவைபோல மொட்டு கட்சியும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள் என எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோர் சூளுரைத்தனர்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் காலை மஹிந்த ராஜபக்ச வாரவில்லை எனவும், மஹிந்த பதவி விலகியதால்தான் கோட்டாவுக்கும் வீடு செல்ல நேரிட்டதாகவும் கூட்டத்தில் தெரிவிகப்பட்டது.